சென்னை:""பகுதிநேர ஆசிரியர்களுக்கான நேர்முகத் தேர்வுகள், இம்மாத
இறுதிக்குள் முடிந்துவிடும். பிப்ரவரி முதல் வாரத்தில், பணி நியமன
உத்தரவுகள் வழங்கப்படும்,'' என, அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர்
முகம்மது அஸ்லம் தெரிவித்தார்.அரசுப் பள்ளிகளில், பகுதி நேர அடிப்படையில்,
உடற்கல்வி ஆசிரியர்கள், ஓவியம், தையல் உள்ளிட்ட கலை ஆசிரியர்கள், 16,549
பேரை நியமிக்கும் பணி நடந்து வருகிறது. இம்மாதம், 15ம் தேதிக்குள்,
நேர்முகத் தேர்வு பணிகளை முடித்து, 27ம் தேதியில் இருந்து, அனைவரும்
பணிகளில் சேரும் வகையில், நடவடிக்கை எடுக்க திட்டமிடப் பட்டிருந்தது.ஆனால்,
பல மாவட்டங்களில், அதிகமானவர்கள் விண்ணப்பித்திருந்ததால், நேர்முகத்
தேர்வுப் பணிகள், இம்மாதம் இறுதிவரை நீட்டிக்கப் பட்டுள்ளன.இதுகுறித்து,
அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர் முகம்மது அஸ்லம் கூறியதாவது: சில
மாவட்டங்களில், அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அதனால், நேர்முகத்
தேர்வு பணிகள் முடியவில்லை. இம்மாத இறுதிக்குள் இந்தப் பணிகள் முடிந்ததும்,
பிப்ரவரி முதல் வாரத்தில், தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு, பணி நியமன
உத்தரவுகள் அனுப்பப்படும்.இவ்வாறு அஸ்லம் கூறினார்.