கோடை விடுமுறைக்குப்பின்,
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் அனைத்தும், ஜூன் 1ம் தேதி திறக்க வேண்டும் என, பள்ளிக்கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு தேர்வுகள் தற்போது நடந்து வருகின்றன. இதர வகுப்புகளுக்கான தேர்வுகள், இம்மாதம் இறுதிக்குள் முடிகின்றன. மே மாதம் கோடை விடுமுறை. இதற்குப்பின், ஜூன் 1ம் தேதி மீண்டும் பள்ளிகளை திறக்க வேண்டும் என, பள்ளிக்கல்வி இயக்குனர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். பள்ளி திறப்பு தேதி குறித்த அறிவிப்பை, வகுப்புகளில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தெரிவிக்க வேண்டும் எனவும், 2012-13ம் கல்வியாண்டில், 200 நாட்கள் கற்றல், கற்பித்தல் பணிகள் நடைபெற வேண்டும் எனவும் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
பள்ளி திறக்கும்போது, மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கவும், துறை ஏற்பாடு செய்துள்ளது.
தொடக்க கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கான புத்தகங்கள், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகங்களுக்கும், பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கான புத்தகங்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கும், மே மூன்றாவது வாரத்தில் இருந்து அனுப்பப்பட உள்ளன. கடைசி வாரத்தில், ஒவ்வொரு பள்ளி தலைமை ஆசிரியர்களும், வாகனங்களை வைத்து, தங்கள் பள்ளிக்கு தேவையான பாடப் புத்தகங்களை, சம்பந்தபட்ட கல்வி அலுவலகங்களுக்குச் சென்று கொண்டு வர வேண்டும். இதற்கான போக்குவரத்து செலவை, பாடநூல் கழகத்திடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகள் திறக்கப்படும் அதே தேதியில், தனியார் பள்ளிகளும் திறக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Comment about this post...