ஜூன் மாத இறுதியில் டி.இ.டி., தேர்வு தள்ளி வைப்பு? :
படிப்பதற்கு ஆசிரியர்களுக்கு அவகாசம்
ஆசிரியர் தகுதித் தேர்வை, ஜூன் முதல் வாரத்தில் இருந்து, கடைசி வாரத்திற்கு தள்ளி வைப்பது குறித்து, ஆசிரியர் தேர்வு வாரியம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. தேர்வுக்கு தயாராக, தேர்வர்களுக்கு போதிய கால அவகாசம் அளிப்பதற்காக, இம்முடிவை டி.ஆர்.பி., எடுக்க உள்ளது.
நீடிப்பு
டி.இ.டி., தேர்வு, ஜூன் 3ம் தேதி நடைபெறும் என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. காலையில் இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வும், பிற்பகலில், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வும் நடைபெற உள்ளது. தேர்வுக்கு, அனைவரும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கும் வகையில், 4ம் தேதியுடன் முடிவடைந்த காலக்கெடுவை, 12ம் தேதி வரை நீட்டிப்பு செய்து, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. இதனால், தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். 20ம் தேதிக்குப் பின், விண்ணப்பித்தோரின் எண்ணிக்கை குறித்த புள்ளி விவரங்கள் தெரிய வரும்.
இதற்கிடையே, தேர்வெழுத போதிய கால அவகாசம் தரப்படவில்லை என, புகார் எழுந்துள்ளது.
பொதுவாக, எந்த போட்டித் தேர்வாக இருந்தாலும், அது குறித்த அறிவிப்புகள் குறைந்தது மூன்று மாதங்களுக்கு முன்பே வெளியிடப்படும். அப்போது தான், தேர்வுக்கு, தேர்வர்கள் தயாராக முடியும். டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் தேர்வுகள் குறித்த அறிவிப்புகள், 6 மாதங்களுக்கு முன்பே வெளியிடப்படுகின்றன.
புத்தகங்கள் இல்லை
ஆனால், டி.இ.டி., தேர்வுக்கான அறிவிப்பு, மார்ச் 7ம் தேதி வெளியான போதும், 22ம் தேதியில் இருந்து தான் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. டி.இ.டி., தேர்வுக்கு தேர்வர்கள் தயாராக, ஒன்றரை மாதம் மட்டுமே கால அவகாசம் உள்ளது.தேர்வுக்கான பாடப் புத்தகங்கள், பாடநூல் கழக அலுவலகத்திலும் விற்பனை கிடையாது; வெளியில் புத்தக கடைகளிலும் புத்தகங்கள் கிடைக்கவில்லை.
மேலும், ஒரே நாளில் இரு தேர்வுகளை நடத்தும்போது, தேவையற்ற குழப்பங்கள் ஏற்படலாம் என்றும் டி.ஆர்.பி., கருதுகிறது. பிற்பகல் தேர்வுக்கான கேள்வித்தாளை, காலையில் நடக்கும் தேர்வுக்கு வழங்கிவிட்டால் வம்பாகிவிடும் எனவும், டி.ஆர்.பி., யோசித்து வருகிறது. பி.எட்., தேர்வுகள், மே இறுதியில் நடக்கின்றன. பி.எட்., படிப்பவர்களும், டி.இ.டி., தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
எனவே, இவர்கள் பி.எட்., தேர்வுக்கு படிப்பதா, டி.இ.டி., தேர்வுக்கு படிப்பதா என குழம்பி வருகின்றனர்.
ஆலோசனை
இந்த அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு காணும் வகையிலும், டி.இ.டி.,தேர்வர்களுக்கு போதிய கால அவகாசம் வழங்கும் வகையிலும், ஜூன் 3ம் தேதி நடைபெற உள்ள டி.இ.டி., தேர்வை, அம்மாத கடைசி வாரத்திற்கு தள்ளி வைப்பது குறித்து, டி.ஆர்.பி., தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
மேலும், ஒரே நாளில் இரு தேர்வுகளையும் நடத்தாமல், வெவ்வேறு நாட்களில் நடத்துவது குறித்தும் ஆலோசித்து வருவதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
செய்தி - தினமலர்
செய்தி - தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Comment about this post...