கல்விமுறையை மாற்றி அமைக்கவேண்டும்:
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம்
அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க இன்றைய கல்வி முறையை மாற்றி அமைக்க
வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாம் கூறினார்.
கோவை பீளமேடு கொடிசியா கண்காட்சி அரங்கில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின்
16வது மாநில மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து
கொண்ட முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாம் சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது; ஆசிரியர் பணி அறப்பணியாகும். இன்று தகவல் தொழில்
நுட்ப வளர்ச்சியால் ஆசிரியர் மாணவர், பெற்றோர் குழந்தைகள் ஆகியோருக்கு
இடையிலான இடைவெளி அதிகமாகி விட்டது. முன்பெல்லாம் குழந்தைகள் மகிழ்ச்சியில்
திளைப்பார்கள். ஆனால் இப்போது அவர்களுக்கு விடுமுறை கிடைப்பது இல்லை.
விடுமுறை நாட்களில் கூட ஏதாவது சிறப்பு வகுப்புகளுக்கு
அனுப்பப்படுகிறார்கள். தகவல் தொழில்நுட்பத்தால் நன்மைகள் கிடைத்தாலும்
வன்முறையும் அதிகமாகி விட்டது. பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் அதிகமான
நேரத்தை செலவு செய்ய வேண்டும்.
வகுப்புகளில் விவாத மேடைகள்,
நாடகம், நடனம், கவிதை, கலாசார கருத்தரங்குகள் நடைபெற வேண்டும். அப்போதுதான்
அறிவார்ந்த சமுதாயம் உருவாகும். வெற்றி தோல்வியை மாணவர்கள் ரசிக்க
வேண்டும்.
இன்றைய கல்வி முறையை மாற்றி அமைக்க வேண்டும். பாடசுமை
குறைக்க வேண்டும். 6ம் வகுப்புவரை பெற்றோர்கள் அரவணைப்பில் மாணவர்கள்
படிக்கும்படி பாடங்கள் இருக்க வேண்டும். 7 ம் வகுப்பிற்கு மேல்
சிந்திக்கும் திறனையும், கனவு காணும் திறனையும் வளர்க்க வேண்டும்.
மாணவர்களை கேள்வி கேட்க விடவேண்டும். மாணவர்கள் கேட்கும் கேள்விக்கு
ஆசிரியர்கள் சரியான பதிலை கூறவேண்டும்.
மாணவர்களின் திறமைகளை
கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்த வேண்டியது ஆசிரியரின் கடமை. அப்போதுதான்
அறிவார்ந்த சமுதாயம் உருவாகும். பள்ளியில் கட்டமைப்பு வசதி இருந்தால்
மட்டும் போதாது. திறமையான ஆசிரியர்கள் இருந்தால் மட்டுமே தரமான கல்வியை
கொடுக்க முடியும். நான் படித்த ராமேஸ்வரம் பள்ளி ஓலைக்கூரைதான்.
இருந்தாலும் அங்கு கற்றுக்கொடுத்த ஆசிரியர்கள் அனைவரும் மாகான்கள்.
எனது வகுப்பில் படித்த 55 மாணவ மாணவிகளும் மேல்படிப்புக்கு சென்றார்கள்.
பள்ளியின் கட்டிடத்தாலோ?: விளம்பரத்தாலோ தரமான கல்வியை தரமுடியாது.